Flowers - Myspace Glitters

புதன், 4 ஆகஸ்ட், 2010

தாஜ்மகால்



கற்களில் பட்டை தீட்டிய வைரம் நீ !
சொற்களில் நீட்டமுடியாக் கவிதை நீ !

உயிருக்குள் ஒளிந்திருக்கும் காவியம் நீ !
கல் வரைந்த காதல் ஓவியம் நீ!

ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
அமைதிப் புறா நீ!

எந்தச்சாயமடித்தாலும் காதல்
வெளுத்துவிடுமெனச் சொல்லும்
வெள்ளை ரோஜா நீ !

கல்லறை வரை காதலிக்கச் சொல்லும்
மெழுகுப் பாறை நீ !

காதல் உலக அதிசயமல்ல
அவசியமென உணரவைத்த பளிங்குப்பூ நீ!

நதியோரம் பிறந்த அதிசயமே...
நானூறு ஆண்டுகளைக் கடந்தும் உன் காதல்
நித்திரையிலும் நிமிர்ந்து நிற்கு்ம் ரகசியம் என்ன?

காலம் சென்றாலும் காதல் நிலைக்குமென
உன் கற்கள் உரசி நிற்பதில் தெரிகிறது

காதல் வந்தால் மனசு இளமையாகிறது

எல்லோரும் தேடுகிறோம்
என்றென்றும் காதலோடு இளமையும் வேண்டுமென

செவ்வாய், 27 ஜூலை, 2010

'மெய்டு' அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

திங்கள், 12 ஜூலை, 2010

The Dance of Eunuchs by Kamala Das - தமிழில்

The Dance of Eunuchs by Kamala Das - தமிழில்

திருநங்கைகளின் நாட்டியம்


எங்கும் ஒரே சூடு அனல் காற்று
அந்த கோஜாக்கள் வந்து ஆடுமுன்
அகண்ட பாவாடைகள் சுற்றிச் சுற்றி வட்டமிட
தாளக்கட்டைகள் கிண்கிண்ணென ஒலிக்கிறது
கொலுசுகள் ஜல் ஜல்லென குலுங்குகிறது
அந்த குல்மொகருக்குக் கீழே
நீண்ட பின்னல் காற்றில் ஆட
கருவிழிகள் மிளிர
ஆடுகின்றனர் ஆடுகின்றனர்
குருதிப்பெருக ஆடுகின்றனர்...
கன்னங்களில் பச்சைக்குத்தி
மல்லிகையைக் கூந்தலில் முடிந்து
ஒரு சிலர் நல்ல கருப்பு நிறத்திலும்
மற்றவரோ மாநிறத்திலும்
குரல் தடித்திருந்தாலும்
பாடுவதோ சோகக்கீதம்...
அன்பர்களின் வெளுத்துப்போன சாயத்தையும்
பிறக்காத குழந்தையாய் கைவிடப்பட்டதையும்
ஒரு சிலர் தாளம் போட மற்றவரோ மார்பிலத்து
ஓங்கிய குரலில் ஆடிப்பாடி ஆனந்தப்பரவசமடைகின்றனர்...
பாதி எரிந்து கிடக்கும் ஈமவிறகைப்போன்ற
ஒல்லியான வறண்ட தேகம்
காய்ந்து இற்றுப்போன உடற்கூறுகள்...
அங்கே காக்கைகள் கூட மரத்தின் மீது
அமைதியாய் உட்கார்ந்திருக்க
பிள்ளைகளோ கண்களை அகல விரித்து
ஆச்சர்யமாய் பார்க்க
அனைவரும் பாவப்பட்ட இந்த உயிருள்ள ஜீவன்களைப்
பார்த்துக்கொண்டிருக்க திடீரென எதிர்பாராக் கிளர்ச்சியுடன்
மேகங்கள் உரசிக்கொண்டு இடிமின்னலுடன்
மழை தூரலிட ஆரம்பித்தது.
அந்தச் சாளரத்தின் தூசில் கலந்து வருகிறது
பல்லிகள் சுண்டெலிகளின் சிறுநீர் வாசனையும்...

புதன், 17 மார்ச், 2010

முதல் குழந்தை

புத்தனே
ஆசையைத் துறக்கும் மனசை
அப்படியே கொண்டு வா

வள்ளுவனே
அறத்தோடு பொருளையும் காக்கும்
பொறுமையை கொண்டு வா

அண்ணலே
சத்தியத்தை உருக்கி வந்து
நல் சக்தி கொடு

விநாயகா
அடங்காப் பசியோடு
அழியாத உடலைத் தூக்கி வா

நபியே
கருங்கூந்தலோடு
நற்குணச் செடிகளையும் நட்டு வை

ஏசுவே
அன்பெனும் போதிமரத்தை இவள்
பக்கத்தில் ஊன்றி வை

ஓ... நல்லோர்களே
அத்தனையும் கொண்டு வந்து
இந்த மர்மக்குகைக்குள் திணித்திடுங்கள்

உப்பு நீரைக் கீறிக்கொண்டு
நல்முத்து வந்து பிறக்குமென்றேன்

நீ பூத்து முடிப்பதற்குள் ஒவ்வொரு
நொடிக்குள்ளும் நூல் நூத்துக் கிடந்ததடி

தங்கமே
அத்தனையும் தாங்கி வருவாயென
என் மனக்கோட்டை திறந்தே கிடந்ததடி

மலர்க்குடையாய் பறந்து
என்னுள் இறங்கி வந்தாய்

அவசரத்தில் என்னை மட்டும்
உரித்து வைத்ததென்னடி

எட்டி உதைத்தவளே
என்னுயிரைத் தின்றவளே

என்னுள் நீயிருந்த நாட்கள்
இன்னும் இனிக்குதடி

கண்ணும் மூக்கும் வைத்து
வரைந்து பார்த்தேன்

காவியமாய் நீ வந்து
என்னுள் கலந்தாயடி...

புதன், 4 நவம்பர், 2009

தீஞ்சுவை

‘மெக்டனால்டு’ வாசலி்ல்
நி
ன்

கூட்டம் திடீரென
கலைந்தது

பட்டுப்பூச்சி
பறந்து வந்ததோ
திரும்பிய போது
எண்புதோல் போர்த்தி
நடந்து வந்த உயிரி
வரிசையில் நிற்க…

கலைந்தது கூட்டம்
உனக்கு விற்பனையில்லையென
கடைக்காரன் விரட்டியடிக்க
வாசலில் வந்தமர்ந்தான்

பரதேசிக்கு
‘பர்கர்’ ஒரு கேடா
தொடை தட்டி
‘தடா’ போட்டதொருக் கூட்டம்

பிஞ்சு மொழி
கேட்டதங்கே
‘அவர்கள் சாப்பிட்டால்
தவறா’ வென

‘உன் தட்டைப் பார்த்து
சாப்பிட்டு விட்டு
எழுந்து வா’
கோபப்பழம் சிவந்தது

அந்த பிஞ்சுக் கரங்கள்
தன் ரொட்டித் துண்டை
தூக்கி வந்து அவன்
தட்டில் போட

தேங்கியக் கண்ணீரை
துடைக்கத் துணியின்றி
முத்தமிட துடித்த உயிரி
எலும்பு கண்ட
பெட்டை நாயாய்
மூலையில் ஒடுங்கிச்
சிரித்தது நன்றியோடு

இந்த
ஏழைகளின் சிரிப்பில்
இறைவனைக் காண
அந்தக் கிளிகள்
தயாராயிருக்க

நெருப்புக் கோழிகளே…
உந்தன் தீஞ்சுவையை
அதன் மேல்
திணிக்காமலிருப்பதே
நிந்தன்
தலையாய தர்மமன்றோ…

சல்லிகள்

வாழைப் பழமென்று
வலிக்காமல்
ஏற்றிடுவார் ஊசியை - அந்த
பழம் நழுவி தன் வாயிலும்
விழுமென அறியாதார்

மாற்றாந் தோட்டத்து
மல்லிகை
மணந்து வீசினாலும்
என் வீட்டு ரோஜாதான்
இளமையென
அடித்துச் சொல்வார்

இருளுக்குள்
போடும் வேஷம்
வெளிச்ச மேடையில்
அரங்கேறுமென அறியாதார்

கனவிலும் கற்பனையிலும்
மிதந்து கொண்டே
தூங்கித்தூங்கி
விழித்திடுவார்

காரியமே கண்ணென்று
கடைசியில் கழனியிலே
கைவிடுவார்

வேரூன்றி விழுதுகள்
விட்டாலும் இவர்கள்
சல்லிகளே!

சனி, 31 அக்டோபர், 2009

திங்கள், 12 அக்டோபர், 2009

மறதி


புழுங்கிக் கிடக்கும்
மனதிற்கு
விடுதலை

புகை



உயிர்
அணுக்களின் விதியை எழுதும்
அனுபூதியே...
உன் அடுப்பூதிய வாய்கள்
கருப்பையில் சிதைந்து கிடக்கும்
கணுக்களுக்கும் தீமூட்டவா
புகையை இழுத்தூதுகின்றன?

புதன், 30 செப்டம்பர், 2009

மனசாட்சி


விழிகளின்
குழிகள்…
உணர்வுகளின்
இறுக்கங்கள்...
உறவுகளின்
தேக்கங்கள்...
மனற்கேணியின்
மேடு பள்ளங்கள்…
வலியின்
வடிகால்கள்...
என்றுலாவியே
பார்வைகளும் பழுதாகிறது
முடிசூடாமேல
மூக்கும் ந‌ட‌க்கிற‌து
எங்கே சென்றாய்
மனசாட்சியின்றி...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

மொட்டு




திங்கள், 28 செப்டம்பர், 2009

அது மட்டும் வேண்டாம்

நடந்துச் செல்லும் நதியைக் கேட்டேன்
விழுமின் எழுமின் என்றது

சிறகடித்துப் பறக்க நினைத்தேன்
நில் கவனிச் செல் என்றது

வானச்சல்லடை சளித்துக் கொட்டும்
மழையைக் கண்டேன்
தனித்திரு ஆனால் சேர்ந்திரு என்றது

நகர்ந்துச் செல்லும் மேகக் கூட்டம் கண்டேன்
காத்திரு ஆனால் பசித்திரு என்றது

எது வேண்டாம்
இரத்தத்தைப் பிரித்துப் பார்க்கும்
அன்னப்பறவைகள் வேண்டாம்

இருட்டுத் தோலின் நிறம் பார்த்துக்
கொக்கரிக்கும் சேவல்கள் வேண்டாம்

கற்பனைக்குயவன் தட்டித் தட்டிச் செய்த
கெளரவச் சட்டி வேண்டாம்

ஊர்க்குருவிகளைப் பருந்தாக்கும்
விஞ்ஞானம் வேண்டாம்

விட்டமின்களை ஓரந்தள்ளி விரைவுணவோடு
விண்மீன் பிடிக்க வேண்டாம்

நட்சத்திரங்கள் விழுவதால்
நிலவுக்குக் கோபம் வேண்டாம்

பண மரத்தடியில் உட்கார்ந்து
பால் குடிக்கும் கழுகுகள் வேண்டாம்

மனித நாவுகளை வேட்டையாடும்
நாகரிகக் கோமாளிகள் வேண்டாம்

ஆசைக்குச் சாணைப் பிடிக்கும்
அறிவுக் கொலை வேண்டாம்

புரண்டு புரண்டு படுக்க வைக்கும்
ஞாபகப் புழுக்கள் வேண்டாம்

இஞ்சி டீயும் கிரீன் டீயும்
கரைக்காத கொழுப்பு வேண்டாம்

மருந்தை உணவாக்கி இயற்கையை
இடுகாட்டில் புதைக்க வேண்டாம்

அலங்காரச் சித்திரங்களைத் தேடி
சுவர்கள் தள்ளாட வேண்டாம்

இன்னும் எது வேண்டாம்
என்னை என்னிலிருந்து
பிரிக்கும் நுண்ணறிவு வேண்டாம்

ஓயாது அடிக்கும் மாய அலையில்
அலைக்கழிக்கும் இந்த
அழுக்கு ஜன்மம்இனி வேண்டவே வேண்டாம்

இனி அடுத்த ஜென்மத்திலாவது
பூ பூவாக பூத்துக் குலுங்கட்டும்…

சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

இரைப்பை நிரப்ப
கோணிப்பையோடு
குப்பையை
சீய்க்கும்
கோழிகள்


வியாழன், 27 ஆகஸ்ட், 2009


உன் வருகையில்
அரும்புகிறது
என்னுள் நீ
நட்டு வைத்த மரம்

சனி, 22 ஆகஸ்ட், 2009

கடிகாரம்


இந்த ரோஜாவிற்குள் முட்கள்,
நாட்களை கடத்துகிறது


யாருக்காக


இருந்தும் மணக்கிறது
இறந்தும் மணக்கிறது
யாருக்கெனத் தெரியாமலே...

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

யாரிவள்?

என்னிலிருந்து வந்தவள்?
என்னை நுழைந்து பார்த்தவள்?
என் புள்ளிகள் வரைந்த கோலம்?
என் உயிரோவியம்?
என் பிரதி?
என் நம்பிக்கை?
என் ஊன்றுகோல்?
என் விதையில் பூத்த பூ ?
என் அறுவடை?
என்னைப் பிரிந்து நிற்கும் நிழல்?
என் மகள் என்ற பெயரில்
வளர்ந்து நிற்கும் யாரிவள்?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

விண்மீன்


விண்மீன்களே
நீர்
விண்ணில் முளைத்ததனால்
தப்பித்தீர்,
தவறி
மண்ணில் முளைத்திருப்பின்
உம்மையும்
கருவாடாக்கி
பையில் போட்டு
விற்றிருப்பர்

புதன், 5 ஆகஸ்ட், 2009

பாரினைக் காக்கும் பசுமை