Flowers - Myspace Glitters

செவ்வாய், 30 ஜூன், 2009

அப்துல் ரகுமான்

கூலிக்கு மாரடித்து
சொற்களைப் பொறுக்கி
எடைபோட்டு
சுடச்சுட வரிகளாக்கி
கூவிக் கூவி விற்போரிடையே

சொல்லோடு பொருள் உரச
வார்த்தைகளைப் பிளந்து
வைரக்கற்களை
வீதிகளில
விசிறி எறிந்தவன்

திங்கள், 29 ஜூன், 2009

இருள் தந்த வெளிச்சம்




வண்ணங்களைக்
கரைத்து
அடுக்கி வைத்தக்
கிண்ணங்களில்
ஊற்றி வைத்தேன்

மயிலிறகை
ஈர்க்குச்சியில் முடிந்து
வண்ணக் கலவையில்
முக்கியெடுத்து
வெற்றுப் பலகையில்
வரைய முனைந்தேன்

விரலை விட்டு
இறங்கிவர மறுத்து
துவண்டுப்போன தூரிகைக்குள்
ஓவியம்
நொண்டியடித்தது

அத்தனை வண்ணங்களையும்
அள்ளியெறிந்து
அண்ணாந்துப் பார்த்தேன்
செல்லரித்த சுவற்றினூடே
ஓர் உயிரோவியம்
மெல்ல நகர்ந்துச் செல்ல
அந்த இருளில்
விழிகள் மட்டும் வெளிச்சமாய்….

வெள்ளி, 26 ஜூன், 2009

நீ


என் வாழ்க்கைப்
புத்தகத்திற்கு
முகவரியானாய்

தாறுமாறாய் கிடந்த
தலையங்கத்தை
ஒட்ட வைத்தாய்

எழுத்துக்களைப்
பின்னி
வலைப் பூவாக்கினாய்

உன் கிறுக்கலில்
நவீன ஓவியமானேன்

நீ ஒற்றைச் சொல்
உணர்ச்சிக் காவியமானாய்

புத்தகத்தைத் திறந்து பார்த்தேன்
ஒரு சில பக்கங்கள் மட்டும்
ஏன் இன்னும்
எழுதப்படாமலே
வெற்றிடமாய் ...

திங்கள், 22 ஜூன், 2009

பயணம்

தண்டவாளத்தில்
கைகோர்த்து தனித்தனியே
பயணம் செய்கிறது
வாழ்க்கை

குறுக்குத்தடத்தில்
வழிமாறினாலும்
சுமைதாங்கியே
பயணம் நீள்கிறது

நீட்சிகளின் முடிச்சி
மெளனங்களில்
கரைந்தாலும்
இந்த வண்டி
ஓடிக்கொண்டேயிருக்கிறது

பூமாலைகள்


பிறப்பின்
பரிணாம வளர்ச்சியை
ஞாபகப்படுத்தோடு
பின்பற்றி
கையில்
பூமாலைகளோடு
அரச மர நிழலில்

வெறுந்தரையில்


புற்களோடு பனித்துளிகள்
மோகத்தில் திளைத்திருக்க

வெடித்துச்சிதறிய
பஞ்சுகளோடு
வண்ணத்தூரிகைகள்
மூச்சுமுட்ட சிக்குக்கோலங்களை
வரைந்து தள்ளின

கார்மேகம் புறப்பட்டு
காலாட்படையோடு
வந்து சென்றது

போர் ஓய்ந்துவிட்ட
வேளையில்
அந்த
அதிகாலையை
வெறுந்தரையில்
தேடுகிறேன்

திங்கள், 15 ஜூன், 2009

குயில் கூவும் சத்தம்

ஏழிசையை சுரத்தோடு பாடுகையில்
தாளம் மட்டும் தப்பிச் சென்றது

தேடிப்பிடித்து வந்த ஆந்தை
கண்விழித்து காவல் காத்தது

கண்மூடிய வேளையி்ல்
பச்சைக்கிளி பறந்து வந்து
கொஞ்சும் மொழி பேசியது
மூக்குடைந்த கிளி
நொண்டிச் சென்றபின்
அங்கே ஒரு குயில் மட்டும்
கூவும் சத்தம் இன்னும் கேட்கிறது

வெள்ளி, 12 ஜூன், 2009

நான்

மெழுகுவர்த்தியை
அணைத்தேன்
நிலவைக் கண்டேன்
‘தான்’ உருகி வழிந்தோட
அந்த இருளுக்குள்
‘நான்’ வெளிச்சமானேன்

உயிர் மரத்தை உலுக்கி...

மாதக்கணக்கில்
சுமக்காமல்
கணநேரத்தில் பெற்றுப்
போடுகிறேன்

ஒருசில தொட்டிலில்
மற்றவை அனாதைகளாய்

சிலவற்றைத்
தாலாட்டுகிறேன்
மற்றவற்றை
கருக்கலைப்பு செய்கிறேன்

நாட்கள்
சிலநேரமென்னை மலடியாக்குகிறது
பலநேரெமனக்குக் கிரீடம் சூட்டுகிறது

இவளுடனான மோகத்தில்
என் ராத்திரிகள் கரைகின்றன

இதயக்குழாயடியில்
புதுரத்தம் குடிக்க அந்த
நரம்புக் குடங்கள்
வரிசையில் காத்துக்கிடக்கையில்

உயிர்மரத்தை உலுக்கி
பெற்றுப்போட்ட களைப்பில்
மூச்சுவிடவும் மறந்து போகிறேன்

இன்பா

அழகானப் பொய்

அழகான முடிச்சுகளின்
நெளிவு சுளிவுகளோடு
பட்டுக்குள் ஒளித்து
மோதிரப்பரிசு தந்தாய்

நாட்கள் தன்னைத்தானே
சுற்றி சூரியனை ஓர் வலம்
வந்து முடித்தபோது
பட்டுச்சேலை பரிசு தந்தாய்

குழந்தையொன்று
அம்மையப்பனைச்
சுற்றி வந்து நின்ற போது
பருத்திச்சேலை பரிசு தந்தாய்

அடுத்தடுத்தாண்டுகளில்
வண்ண வண்ண
வாழ்த்து அட்டைகளோடு
காகிதப் பரிசானது

பரபரவென்று
பத்தாண்டைத் தொட்டுவிட்டது
பத்து பவுன் நகையோடு நீ
வருவாயென இருந்தேன்

பத்திரமாற்றுத் தங்கம்
நானே பரிசாக என்றாய்

தேய்பிறையில்
தொய்ந்த நிலவுக்கு
இந்தப் பொய்யும்
அழகானது தான்